• வலிமையான ஜெபம் – 4

    ஹாய் குட்டிஸ், “வலிமையான ஜெபம்” என்கிற தலைப்பில உங்களை மீண்டும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.

    கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும்;

                                                                                                               எசேக்கியேல் 36 : 37

    நாம நம்ம தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணனும்னு அவரே நம்மகிட்ட கேட்கும் போது உங்களுக்கு என்ன தோணுது குட்டிகளா? என்னை பத்தி தெரிந்தவர் என்னுடைய இயேசப்பா. என்னுடைய பழைய வாழ்க்கை, என்னுடைய பலவீனங்கள், என் சந்தோசம், மகிழ்ச்சி, விருப்பம், வெறுப்பு, என்னுடைய எதிர்கால வாழ்க்கை எல்லாமே அவருக்கு தெரியுமே. அப்படி இருக்கும் போது என்னுடைய பிரச்சனை, கஷ்டம், இப்ப எனக்கு என்ன தேவைன்னு நான் என் வாய் திறந்து கேட்டால்தான் அவர் எனக்கு தருவாரா? நம்ம இயேசப்பா என்னை சூழ்ந்திக்கிறவர் (சங்கீதம் 139 : 3, 4) எனக்கு உள்ளேயும் இருக்கிறவர்(கண்டிப்பா கீழேயுள்ள வசனங்கள் மூலமா நீங்களும் நம்புவீங்க குட்டிகளா).

    தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக் கொண்டீர்.

                                                                                                                            சங்கீதம் 68 : 18

     நித்தியவாசியும் பரிசுத்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதுக்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதுக்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.

                                                     ஏசாயா 57 : 15

    அவருக்கு என்னைப் பற்றி நான் சொன்னாதான் புரியுமா? எத்தனையோ கேள்விகள் நமக்கு தோணலாம் குட்டிகளா. சரிதானே!

    நாம நம்மளுடைய விண்ணப்பங்களை முழுமையா அவர்கிட்ட சொல்லணும்னு நம்ம இயேசப்பா ஆசைப்படுறார் என்பதை எசேக்கியேல் 36 : 37 மூலமா புரிந்திருப்பீங்க. அதை குறித்து நம்ம இயேசப்பா சொல்லுற விளக்கங்களை தெரிந்து கொள்ளுவோமா?

    குட்டிகளா, உங்களுக்கு கதைன்னா ரொம்ப பிடிக்கும்னு எங்களுக்கும் தெரியும்.

    ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில எல்லா விலங்குகளும் இருந்தது குட்டிகளா. உங்களுக்கு எத்தனை wild animals தெரியுமோ, அத்தனையும் அங்க ரொம்ப சந்தோசமா இருந்ததாம். அந்த காட்டுக்கு ராஜா யார் தெரியுமா குட்டிகளா. நம்ம சிங்க மகா ராஜாதான். அவருடைய ஆளுகைக்கு உட்பட்ட அந்த காட்டில இருந்த எல்லா விலங்குகளும் ரொம்பவே சந்தோசமா தன்னுடைய வாழ்கையை கழித்தது.

    அந்த காட்டில இருந்த விலங்களுக்கு கஷ்டம்னா என்னன்னு கூட தெரியாதாம். அவ்வளவு ஹாப்பியா இருந்ததாம். ஏன்னா அந்த காட்டுக்கு ராஜாவாகிய நம்ம சிங்க ராஜா, தன்னுடைய ஆளுகையில இருக்கிற மத்த animalsகு எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு எல்லா விசயங்களையும் ரொம்பவே பார்த்து பார்த்து அந்த காட்டை அரசாட்சி செய்ததாம். அவங்களுக்கு கிடைக்கிற சாப்பாடுல இருந்து பொழுதுபோக்குகள், வேலைகள் உட்பட தன்னுடைய ராஜா தனக்கு என்ன கட்டளையிட்டாரோ, அதை அந்த காட்டில இருந்த எல்லா விலங்களுக்கும் ரொம்பவே விரும்பி செய்ததால அந்த காடு அவங்களுக்கு பரலோகம் மாதிரிதான் தோணுச்சாம்.

    வாவ்…..என்ன ஒரு அருமையான வாழ்க்கை. இப்படி பிரச்சனை, கஷ்டம், கண்ணீர் எதுவும் இல்லாம இருந்தா எங்களுக்கு கூட எங்க வாழ்க்கை பரலோகம் மாதிரிதான் தோணும்ன்னு நீங்க யோசிக்கிறது எங்களுக்கும் புரியுது குட்டிகளா.

    இவ்வளவு சந்தோசமா தன்னுடைய வாழ்கையை அந்த காட்டில வாழ்ந்திட்டிருக்கிற எல்லா விலங்களுக்கும் ரொம்பவே சந்தோசமான விஷயம் வந்தது. அது என்ன தெரியுமா குட்டிகளா, அந்த காட்டை அந்த ராஜாக்கு பிறகு ஆட்சி செய்ய போற ஒரு குட்டி சிங்கம் பிறந்ததாம். ஆடல், பாடல், நடனம்ன்னு அவங்க தன்னுடைய சந்தோசத்தை தன்னுடைய குட்டி இளவரசனுக்கு வெளிப்படுத்தினாங்க.

    அந்த குட்டி சிங்கத்துடைய ஒவ்வொரு அசைவுகளும் அந்த ராஜாக்கு மட்டுமில்ல குட்டிகளா, காட்டில இருந்த எல்லா விலங்களுக்கும் சந்தோசத்தை கொடுத்தது. இந்த மாதிரி சந்தோசமா போயிட்டு இருந்த அந்த இளவரசனுக்கு ஒரு பெரிய சோதனை வந்தது.

    என்ன சோதனை தெரியுமா குட்டிகளா, நம்ம இளவரசனுக்கு அந்த காட்டை சுத்தி பார்க்குற விருப்பம் வந்தது. அப்பாகிட்ட கேட்டார், அப்பாவும் சரின்னு சொல்லிட்டாங்க. நம்ம இளவரசனுக்கு சந்தோசம் தாங்க முடியலை. ஒரே ஜம்ப்பா அப்பாவுக்கு முத்தம் கொடுத்திட்டு, காட்டை சுத்தி பார்க்க கிளம்பினது. நம்ம இளவரசன் கிளம்புறதுக்கு முன்னாடியே அப்பா சொல்லிட்டாங்க. குட்டிமா, நம்ம காட்டில எனக்கு உட்பட்ட பகுதிகள் இவ்வளவுதான், அதற்கு மேல சுத்தி பார்க்கணும்னு ஆசைபடாதே, அது உன்னுடைய உயிருக்கே பிரச்சனையா மாறிரும்னு.

    அப்பா சொன்ன போது எல்லாத்துக்கும் சரி, சரின்னு சொன்ன நம்ம இளவரசனுக்கு காட்டுடைய எல்லைக்கோடை பார்த்ததும் ஒரு பெரிய ஆர்வம் வந்தது. இந்த எல்லைக்கோட்டுக்கு அடுத்து அப்படி என்ன விசேஷம்தான் இருக்கு, போய்தான் பார்த்திருவோமேன்னு. தேவையில்லாத ஆர்வம் வந்த நம்ம இளவரசன் அப்பாவுடைய எச்சரிக்கையும் மறந்து தன் கால் போன போக்கில இங்கும், அங்கும் சுத்தி திரிந்தது. ஆத்து தண்ணீர்ல விளையாடுச்சு. பக்கத்தில புல் மேய்ஞ்சிட்டு இருந்த மான்களை தன்னுடைய சத்தத்தை உயர்த்தி பயமுறுத்தினது. இரவு நேரம் நெருங்கின பிறகும் கூட வீட்டை பத்தி யோசிக்காம தன் கால் போன போக்கில நம்ம இளவரசன் சுத்திட்டே வந்தாங்க.

    இந்த இடம் இவ்வளவு அழகா இருக்கு , இதுல இங்க வந்தா என்னுடைய உயிருக்கே பிரச்சனை வந்துரும்னு வேற என் அப்பா தேவையில்லாம பொய்  சொல்லிட்டாங்க. நாளைக்கி அப்பாவையும் இங்க கூட்டிட்டு வந்து காண்பிக்கணும். என்ன ஒரு அழகான இடம், இதை போய் பிரச்சனை உள்ள இடம்னு சொல்லிட்டாங்களேன்னு அப்பா சிங்கம் மீது சிறு கோபத்தையும் வைத்து கொண்டது.

    இது வரை தாவி குதித்து, ஓடிய நம்ம இளவரசனுடைய கால்கள் இப்ப வலிக்க ஆரம்பிச்சிருச்சு. சரி போதும், இது வரை விளையாடினது. வீட்டுக்கு போவோம்ன்னு நினைச்ச நம்ம இளவரசன் அப்பதான் தன்னுடைய வீட்டுக்கு போற வழியை தேடி பார்த்ததாம். சான்ஸே இல்லை குட்டிகளா, வழிகள் எல்லாமே ரொம்பவே குழப்பமா கிட்டத்தட்ட சிக்கலான வழியாகத்தான் தோணுச்சு. ஆனா நம்ம இளவரசன் கொஞ்சம் கூட பயப்படலையாம். இந்த வழியா இருக்கும், அதுதான் வழின்னு தனக்கு தெரிந்த வரைக்கும் எல்லா வழிகளிலும் போய் பார்த்திருச்சு. ஆனா வழி மட்டும்தான் நம்ம குட்டி இளவரசனால கண்டுப்பிடிக்க முடியலை.

    ரொம்பவே இருட்ட ஆரம்பிச்சதால இனி வழி தேடுற வேலையும் நம்ம இளவரசனால தொடர முடியலை. தன்னுடைய எல்லா பலத்தையும் இழந்த நிலமையில,அப்படியே சோர்ந்து போய் உட்கார்ந்திருச்சு நம்ம இளவரசன். அதனுடைய அழகான சின்ன கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் வந்துட்டே இருந்துச்சு. என்ன செய்யுறதுன்னு அதுனால யோசிச்சி கூட பார்க்க முடியலை. அப்பா சொன்னதை மீறி வந்துட்டேனே, எப்படி போவேன் மட்டும்தான் நம்ம குட்டி இளவரசன் மனதில ஓடிச்சி குட்டிகளா. நம்ம இளவரசனால பார்க்க முடிந்த தூரத்தில ஒரு மரத்தின் கிளை பகுதியில ஒரு அட்டை ரொம்பவே பிரகாசமா தொங்கிட்டிருந்தது. நம்ம குட்டி இளவரசன் ரொம்பவே அழுதிட்டு இருந்ததால, என்ன இருக்குன்னு வாசித்து கூட பார்க்கலை. நம்ம இளவரசன் இருந்த காட்டின் அந்த பகுதிக்கு “மறதி பூமி”ன்னு பெயர் இருந்ததால, அங்க இருந்த ஒவ்வொரு காரியமும் அவனுக்கு ஏமாற்றுகிற காரியமாத்தான் தோணினது. நம்ம குட்டி இளவரசன் அழதது, அழுதது, அழுதிட்டே இருந்தது……………………..

    உங்களுக்கு ஒரு முக்கியமான விசயத்தை சொல்ல மறந்திட்டோம் குட்டிகளா. அந்த மரத்தின் கிளையில் இருந்த அட்டையில் எழுதி இருந்த வாசகம் என்ன தெரியுமா குட்டிகளா.

    “ உன் தகப்பனை நோக்கி கூப்பிடு, அப்பொழுது தப்புவாய்.”

    இந்த ஏற்பாடு நம்ம சிங்க ராஜாவால உருவாக்கபட்ட ஏற்பாடுதான் குட்டிகளா. தன்னுடைய பிள்ளைகள் தெரியாம வழி தவறி போகும் போது அவர்களை காப்பாற்ற அவர் செய்த ஏற்பாடு.

    என்ன குட்டிகளா, உங்க மனதும் கனமா இருக்குதா? அந்த குட்டி இளவரசன் அந்த வார்த்தையை பார்த்திர கூடாதா……எப்படியாவது தன்னுடைய அப்பாகிட்ட போயிற கூடாதான்னு உங்களுக்கும் தோணுதா……

    ஒரு குட்டி சிங்கதுக்காக நீங்க பரிதாப்பட்டுட்டு இருக்கிற இந்த சமயம், நம்மளை பார்த்து நம்ம இயேசப்பாவும் கண்ணீரோடு பார்த்திட்டிருக்கிறார்.

    என்னுடைய பிள்ளை எப்ப என்னை பார்த்து கூப்பிடுவான்னு???????????????

    உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார். 

                                                  சங்கீதம்  22 : 24

    இப்பனாச்சும் நம்ம இயேசப்பாவை நோக்கி கூப்பிடலாமா குட்டிகளா.

    வலிமையான ஜெபம் என்பதை குறித்து நம்ம இயேசப்பா(சர்வ வல்லமையுள்ள தேவனின் வார்த்தை) நமக்கு சொல்லி கொடுக்கிற காரியங்களை அடுத்த முறை கேட்கலாமா. நமது தேவனுக்குள் சந்திப்போம்……

    Related Post

    Categories: வலிமையான ஜெபம்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    1 × = six

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>