• இயேசு கிறிஸ்து யார்?(8)

    கல்லுகள் அப்பங்களாகும் படி சொல்லும்

    jesus81

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நம்ம இயேசப்பா சாத்தானால் சோதிக்கப்பட்டது உங்களுக்கும் தெரியும் குட்டிகளா. மூன்று வார்த்தைகளால் அவன் நம்ம இயேசப்பாவை சோதித்த போது நம்ம இயேசப்பா என்ன வார்த்தைகள் அவனுக்கு திருப்பி சொன்னங்கன்னு உங்களுக்கு நல்லா தெரியும். சரி குட்டிகளா, நம்ம இயேசப்பா அதை குறித்து என்ன சொல்லுறாங்கன்னு தெரிந்து கொள்ளுவோமா?

    நம்ம இயேசப்பாக்கு பசி உண்டான போது சோதனைக்காரன்(நம்மளையும் சோதிக்கிறவனும் அவன்தான்) “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்”ன்னு சொன்னான். உங்களுக்கு ரொம்பவே தெரிந்த வார்த்தை. ஆனா அவன் எதற்கு இந்த கேள்வியை கேட்டான் உங்களுக்கு தெரியுமா குட்டிகளா?

    சாத்தான் சரியான கேள்வியைத்தான கேட்டிருக்கிறான். நம்ம இயேசப்பாக்கு வயிறு பசிச்சுதே, அதுனால அனுதாபப்பட்டு இதை சொல்லியிருப்பான். இவை உங்க மனதில ஓடினா சாரி குட்டிகளா, இன்னும் நீங்க சாத்தான் தந்திரங்களுக்கு விலகி இருக்கணும் என்பது நம்ம இயேசப்பாவின் வேண்டுதல். புரியாம நீங்க பார்க்கிறது எங்களுக்கு புரியுது குட்டிகளா. நாம எப்படி இந்த உலகத்தில படைக்கப்பட்டோம்ன்னு உங்களுக்கு தெரியும் குட்டிகளா. நாம பூமியின் தாழ்விடங்களில் விசித்திர விநோதமாய்(ஒளிப்படத்தில்) உருவாக்கப்பட்டு கொண்டிருந்த போதே நம்மளை நம்ம தேவன் கவனிக்கிறாராம். அது மட்டுமில்ல ஒரு தாயின் கர்பத்தில ஒரு குழந்தைக்கு எப்படி எலும்புகள் உருவாகுதுன்னு இன்னும் கண்டுப்பிடிக்கப்படலையாம். இவ்வளவு அழகாக, ஆச்சர்யமா நம்மளை உருவாக்கின நம்ம தேவன், நம்மகிட்ட இந்த உலகத்தில எதிர்பார்க்கிறது எல்லாமே அவருடைய பிள்ளைகளா அவர் சொற்படி கீழ்படிந்து நடக்கிறதுதான்.

    உங்க மனது என்ன கேள்வி கேட்குதுன்னு எங்களால் புரிஞ்சுக்க முடியுது. எங்க தேவன் எங்ககிட்ட எதிர்பார்க்கிற கீழ்படிதலுக்கும், சாத்தான் சொன்ன வார்த்தைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? சரியா. சம்பந்தம் உண்டு குட்டிகளா. என்னதுன்னா நம்மளை சாத்தான் வஞ்சிக்கிற காரியம் முதல்ல நம்மளாலே புரிந்து கொள்ள முடியாத அளவு குழப்பத்தை அதாவது அன்பான வார்த்தைகள்தான். அதுவும் நம்ம நலத்தை நாடி நமக்காக ஏங்குற வார்த்தைகள் மாதிரித்தான் தோணும். இப்ப உங்களுக்கு புரிந்து கொள்ள முடியுதா? மழையில நனையுற ஆடுக்காக அழுகிற ஓநாய். இப்ப உங்களுக்கு தெளிவா புரிந்திருக்கும். சே…..இது எப்படி தெரியாம போச்சு. என்னை இந்த அளவு வேதனைக்கும், கண்ணீருக்கும் உட்படுத்துற அவனால் என்னுடைய நல்லதை பத்தி எப்படி யோசிக்க முடியும்?ன்னு உங்க மனதும் கேள்வி கேட்குதா. இந்த காரியத்தை உங்களுக்கு வெளிபடுத்ததான் இதை சொன்னார்.

    சாத்தானால நம்ம நலத்தை பற்றி என்னைக்கும் யோசிக்க முடியாது. ஏன்னா அவன் அப்படிப்பட்டவன்தான். மற்றவங்களை அதாவது தேவனுடைய பிள்ளைகளாகிய நம்மளை கஷ்டப்படுத்தி பார்த்து அதன் மூலமா சந்தோசம் அடைகிற ஒரு வித்தியாசமான படைப்பு. நீங்க நம்ம தேவனுடைய வழிகளில் நடந்து கொண்டிருக்கும் போது இப்படி ஏதாவது குரல் உங்க காதுக்கு கேட்டதுண்டா……..ஜாய் நீ ரொம்ப நேரம் முழங்கால் போட்டு ஜெபம் பண்ணும்னு அவசியம் இல்லை, பைபிள்ல அப்படி ஏதாவது எழுதப்பட்டிருக்கா?…………பீட்டர் நீ ஏன் காலையில எழுந்து ஜெபம் பண்ணும்னு நினைக்கிற, நீ ரொம்ப டயர்டா இருக்க, இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கிட்டு ஜெபம் பண்ணலாமே………..ரோஸ் இன்னைக்கி நீ சண்டே ஸ்கூல் போக வேண்டாம், உன் தோழியுடைய பிறந்தநாள் பார்ட்டி இருக்கே, அடுத்த வாரத்தில இருந்து ஒழுங்காக போவோம்…… கவனம் குட்டிகளா. இதுதான் சாத்தான் உங்க வாழ்கையில நுழையறதுக்கு போடுற அஸ்திவாரம். கவனமா அவனை நீ கடிந்து கொள்ளாட்டி, அடுத்து உன் வாழ்கையில என்றும் சிக்கல்தான். ஏன்னா அவன் வார்த்தைக்கு செவி கொடுக்கும் போது நம்ம சமாதானத்தை இழக்க நேரிடும். அடுத்து நாட்களோ இல்லை மாதங்களோ மன குழப்பத்திலேயே இருந்து என்ன ஆச்சு எனக்கு, ஏன் இப்படி இருக்கேன்?ன்னு நம்மளை அலசி ஆராய்ஞ்சு தப்பை கண்டுபிடிச்சி, நம்ம இயேசப்பாகிட்ட சாரி கேட்டு…….எத்தனை பெரிய நீண்ட வேலை. இது நமக்கு தேவையா குட்டிகளா.

    இப்ப நம்மளை இப்படி சிக்க வைக்கிற சாத்தானுக்கு நம்ம இயேசப்பா என்ன சொன்னாங்கன்னு தெரிந்து கொள்ளலாமா? மனிதன் அப்பத்தினால் மாத்திரம் இல்லை, தேவனுடைய வாயில இருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”ன்னு சொன்னாங்க.

    இதன் மூலம் என்ன புரிந்து கொள்ள முடியுது குட்டிகளா. சப்போஸ் நீங்க அந்த நாள்ல உங்களுடைய படிப்புக்காக இல்லை வேலைக்காக உபவாசம் எடுக்குறீங்க. அப்ப சாத்தான் உங்க காதுல வந்து ஹாரிஸ், இன்னைக்கி உங்க வீட்டுல என்ன சாப்பாடு தெரியுமா, உனக்கு பிடிச்ச புட்டும், கறி குழம்பும், இன்று ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு அடுத்து உபவாசம் பண்ணலாமே…….முதல்ல அவனுக்கு எதிர்த்து நில்லுங்க குட்டிகளா. அதோட நம்ம இயேசப்பா உங்களுக்கு கொடுத்த வார்த்தையை தைரியமா(சோர்வா இல்லை) சொல்லுங்க. மனிதன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயில இருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்னு.

    சப்போஸ் உங்க உடல் பலவீனத்தை காண்பிச்சி இன்னைக்கி நீ ஜெபம் பண்ண வேண்டாம். நீ ரொம்பவே வியாதியா இருக்க, நாளைக்கு பார்க்கலாம்………இந்த வார்த்தையை உங்க காது கேட்ட அந்த நொடியே என்னை பலப்படுத்துகிற கிறிஸ்துவாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலன் உண்டுன்னு தைரியமா சொல்லுங்க.

    நீங்க எதிர்பார்க்கிற டிரஸ், ஸ்வீட், பொம்மை எப்படி ஏதாவது இருந்து, அதை உங்க அம்மா/ அப்பாவால வாங்கி கொடுக்க முடியாத சமயம் நமக்கு கோபங்கள் எழுறது சகஜம் குட்டிகளா. அப்ப உங்க காதுல நீ எந்த பொருளுக்குமே ஆசைபடவே மாட்ட, ஒரு சாதாரண பொருள், இதை கூட உன் அம்மா/அப்பாவால வாங்கி தர முடியலை, அழு, அடம் பிடி. என் மேல உங்களுக்கு பாசமே இல்லைன்னு சொல்லு, வாங்கி தந்துருவாங்க……அப்ப நீங்க சொல்ல வேண்டியது. என் இயேசப்பாவின் கிருபை எனக்கு போதும். என்னுடைய தேவைகளை அவர் அறிந்திருக்கிறார்ன்னு சொல்லுங்க. அப்ப அவனால் என்ன பண்ண முடியும். உங்களை விட்டு ஓடி போயிருவான். நீங்க அவர் மார்பில எப்பவும் போல சுகமா சாய்ந்து சமாதானம் பெற முடியும்.

    இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும் குட்டிகளா. எந்த ஒரு பலத்தாலோ இல்லை நம்ம அறிவு திறமையாலோ நம்மளால் கண்டிப்பா சாத்தானோடு போரோ, எதிர்த்து நிற்கவோ முடியாது. முழுமையா நம்ம தேவனுடைய வார்த்தைகளை வைத்துதான் அவனை விரட்ட முடியும். எனக்கு அவன் சோதனை கொடுக்கிற நேரத்தில டக்குன்னு பைபிள்ளை எடுத்து வாசித்து எப்படி போர் புரிய முடியும்னு உங்க மனது கேள்வி கேட்குதா? சரியான கேள்விதான் குட்டிகளா. அது மட்டுமில்ல அவன் எனக்கு எப்படிப்பட்ட சோதனை கொண்டு வருவான்னு தெரியாதே? அதுனால எந்த வார்த்தைகளை அந்த நேரத்தில யூஸ் பண்ணணும்னு குழப்பங்கள் கூட தோணலாம். உங்களுக்கான பதில் இதுதான் குட்டிகளா. உங்களோட சாத்தான் சண்டை பண்ணிட்டு இருக்கும் போது, அந்த அவசர நேரத்தில பைபிள்ல சரியான வசனத்தை தேடுறது கஷ்டமான காரியம்தான். ஆனா என்றும் உங்க வாழ்கையில அனுதின வேத வாசிப்பு இருந்தா இந்த பிரச்சனை இல்லையே. சாத்தானோட சண்டை இல்லைன்னு சொல்ல வரலை. அவசர அவசரமா வேத வார்த்தைகளை தேட வேண்டியதில்லை. தினமும் வேதம் வாசிக்கிறது ரொம்பவே நல்லதுன்னு சொல்லறதை விட ரொம்பவே அவசியமான காரியம். அதாவது நம்ம உடலை நல்லா வைச்சுக்க சரியான சாப்பாடு, தண்ணீர், நல்ல காற்று மாதிரி பைபிள் வாசிப்பும் ரொம்பவே அவசியம். நீங்க ஏற்கனவே சொன்ன காரியங்களை விட தண்ணீர், சாப்பாடை விட வேத வாசிப்பு ரொம்ப முக்கியம்.

    அதுனாலத்தான் நம்ம இயேசப்பாவும் அழகாக சாத்தான்கிட்ட சொன்னாங்க. அப்பத்தினால் மட்டுமில்ல, என் பிள்ளைகளை என் வார்த்தையினால் பிழைக்க வைக்க என்னால் முடியும்னு. அதுனால என்னத்தை உடுத்துவோம், எதை சாப்பிடுவோம்ன்னு அதை பத்தி மட்டுமே யோசித்து உங்க சந்தோசத்தை கெடுக்காம நம்ம தேவனுடைய வார்த்தைகளுக்கு என்றும் முதலிடம் கொடுங்க. அப்ப உங்களுக்கு என்ன தேவைன்னு ஏற்கனவே தெரிஞ்சு வைச்சிருக்கிற நம்ம இயேசப்பா எல்லாவற்றையும் தருவார். ஏன்னா நமக்குன்னு குறித்திருக்கிறதை அவர் கண்டிப்பா நிறைவேற்றுவார். வேத வாசிப்பு எவ்வளவு முக்கியம், அதுவும் ஆழமான வாசிப்பு(அவசர அவசரமா வாசிக்காம மெதுவா, அதே சமயம் ரொம்பவே உன்னிப்பா) எவ்வளவு முக்கியம்ன்னு உங்களுக்கும் புரிந்திருக்கும் குட்டிகளா. சண்டை போடும் போது  உங்களுக்கு அந்த வார்த்தையை ஞாபகத்தில கொண்டு வருவதும், அந்த வார்த்தைகளை உங்க வாயில இருந்து வல்லமையா வர வைக்கிறதும் பரிசுத்த ஆவிப்பா பார்த்துக்குவாங்க. அதை குறித்து நீங்க கவலை பட வேண்டியதில்லை. இப்ப நாம கேள்வி பகுதிக்கு போகலாமா?

    நமக்கு சரீர பலவீனங்கள் வந்தா எப்படி தேவ வார்த்தையால எதிர் கொள்ளனும்னு நம்ம இயேசப்பா நல்லா சொல்லி கொடுத்தாங்க. ஆனா நம்ம இயேசப்பா சிலுவையில தொங்கினப்ப “தாகமாயிருக்கிறேன்”ன்னு ஏன் சொன்னாங்கன்னு சொல்ல முடியுமா குட்டிஸ்?(நம்ம இயேசப்பாக்கு உண்மையிலேயே தாகம் எடுத்ததால்தான் சொல்லியிருப்பாங்களோ??????)

    கேள்விக்கான பதிலை கண்டுப்பிடிக்க வீட்டுல உள்ளவங்ககிட்ட ஓடிட்டீங்கன்னு நினைக்கிறோம். சரியா குட்டிகளா.

    நம்ம இயேசப்பா சாத்தான் தன்னை இரண்டாவது கேள்வி கேட்டதுக்கு என்ன பதில் சொன்னாங்கன்னு அடுத்த முறை தெரிந்து கொள்ளலாமா?

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    4 + = seven

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>